"Seeding the Values of the Reign of God"- Rev. A. Stephen

8 டிசம்பர் 2024: திருமுழுக்கு யோவானின் பிறப்பும் இறைவார்த்தையும்

லுக்கா 1:39-45

• திருமறையை நாம் வாசித்துப் பார்க்கும்போது அதில் படைப்பில் ஈடுப்பட்ட வார்த்தை, இறைவாக்கினர்கள் மூலமாக பேசப்பட்ட வார்த்தை, மனுவுருவாகிய வார்த்தை, எழுதப்பட்ட வார்த்தை என இவ்வாக்கு நான்கு நிலைகளில் பேசப்படுவதை நாம் காண்கிறோம்.

• 2 தீமோத்தேயு 3:16,17ல் இறைவார்த்தைகள் அனைத்தும் இறை ஆவியினால் ஏவப்பட்டு அருளப்பட்டதென்றும் ஒவ்வொரு மனிதர்களும் நற்செயல்களைச் செய்வதற்கும் நீதி வழியில் அவர்களை நடத்துவதற்கும் ஏற்ற ஊடகமாக இவைகள் காணப்படுகின்றன எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்த இறைவார்த்தைகளின் நிறைவே திருமுழுக்கு யோவானுடைய பிறப்பு என நாம் காண்கிறோம்.

• மல்கியா இறைவாக்கினருக்கும் மத்தேயு நற்செய்திக்கும் இடையே 400 வருடங்கள் இறைவாக்குகள் அற்ற ஒரு காலமாக காணப்படுகின்றது. இதனையே நாங்கள் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடைப்பட்ட காலம் எனக் குறிப்பிடுகின்றோம். இவற்றின் நிறைவாகவே திருமுழுக்கு யோவானின் பிறப்பு உதயமாகின்றது. மல்கியா 4:1ம் வாக்கியங்களில் இதோ நான் ஒரு தூதனை அனுப்புவேன் என்ற வாக்கு இதனையே எடுத்துக் காண்பிக்கின்றது.

• லூக்கா நற்செய்தி 1:5-7 வசனம் வரையுள்ள பகுதியில் எலிசபெத் சகரியா இவர்கள் இருவரும் கடவுளால் இடப்பட்ட கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைப்பிடித்து வந்தனர். இவ்வேளையிலேயே இவர்களுக்கு திருமுழுக்கு யோவானின் பிறப்பின் செய்தி கொடுக்கப்படுகின்றது. லூக்கா 1:39-45 வரையுள்ள பகுதியில் மரியாள் எலிசபெத்தைக் காண செல்கின்றார். தான் கருவுற்ற நிலையில் பல அவமானங்களை அனுபவிக்கும் மரியாள் இப்பொழுது எலிசபெத்தைக் கண்டு ஆறுதலடையச் செல்கின்றார். அவ்விடத்திலேயே எலிசபெத்தும் இத்தகைய அனுபவத்துக்கூடாகச் செல்கின்றார் என உணர்ந்த மரியாள் இருவரும் தமக்கிடைய நிலவுகின்ற வேதனைகளைச் சொல்லி ஒருவரோடு ஒருவர் ஆறுதல் அடைகின்றனர். இம்மாதிரி இன்றைய பெண்களுக்கும் அவசியமாகின்றது.

• திருமுழுக்கு யோவான் கடவுளுக்கு வழியை ஆயத்தப்படுத்த அனுப்பப்படுகின்றார். இவர் இயேசுவுக்கு முன்னோடியாகவும் அமைகின்றார். லூக்கா 3:10-17 வரையுள்ள பகுதியில் பகிர்வு, நேர்மை போன்ற இறையரசின் பண்புகளை விதைக்கின்றார். மாற்கு 6:1-20ல் நீதி என்னும் பண்புக்கு உயிர் கொடுக்கின்றார். இவைகள் ஆண்டவர் இயேசு இப்பண்புகளுடன் பிரயாணிக்க திருமுழுக்கு யோவானின் பணி இலகு வழியாகக் காணப்பட்டது.

• திருமுழுக்கு யோவானும் ஆண்டவர் இயேசுவைப் போன்று இறையாட்சிக்காக வாழ்ந்து இறையாட்சிக்காக மரித்தவர். எனினும், அவர் மீண்டும் வருவார் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்பட்டது. லூக்கா 8:19-23ல் பிலிப்பு செசரியா பட்டணத்தில் இயேசுவின் அறிக்கையில் ஜனங்கள் அவரை யாரென்று கூறுகின்றார்கள் எனக் கேட்ட கேள்விக்கு ஒருசிலர் திருமுழுக்கு யோவான் என்றும் கூறுகிறார்கள் என உரைத்த பதில் அதிசயமானது. எனவே, கிறிஸ்து பிறப்பு நாட்களில் திருமுழுக்கு யோவானின் எளிமை, தாழ்மை போன்ற பண்புகளுடன் இயேசுவை வரவேற்க ஆயத்தமாவோமாக. 

- அருட்பணி. அருளம்பலம் ஸ்டீபன்

இலங்கை திருச்சபை.

Comments